வியாழன், 25 மார்ச், 2021

மலக்கட்டை போக்குவது எப்படி (constipation)

How to resolve Constipation problem naturally



கால சக்கரத்தில் அடிப்பட்டு வீழும் மனிதன், தன்னுடைய அன்றாட செயல்களை கூட செய்ய முடியாமல் தவிப்பது, காலத்தின் கட்டாயமாகி விட்டது. சாப்பிடுவதில் தொடங்கி மலம் கழிப்பது வரை, ஏதே ஒரு கடமையை போல செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதிலும், மலம், சிறுநீர், வியர்வை போன்ற உடலின் கழிவு பொருட்களை முறையாக வெளியேற்றாத தால், பல நோய்களுக்கு காரணமாகி விடுகிறது.

மலம், சிறுநீர், கொட்டாவி, பசி, தூக்கம் போன்ற பதினாங்கை, இயற்கை வேகங்கள் என்று சித்தர்கள் வகுத்துள்ளனர். அவைகளை முறையாக வெளியேற்ற வேண்டும் அல்லது கடைபிடிக்க வேண்டும். இல்லையேல், பல உடல் உபாதைகள் உண்டாகும்.
அதில் முக்கியமான ஒன்று மலம். மலம் குறைவாக வெளியேற்றப்படுவது அல்லது தடை ஏற்படுவது மலக்கட்டு அல்லது மல பந்தம் என்கிறோம். மலக்கட்டு என்பது குறிகுணமே தவிர, நோயல்ல.
மலம் எவ்வாறு வெளியேற்றப்படுகிறது?
உண்ட உணவு சிறுகுடல் வழியாக உட்கிரக்கப்பட்டு, மீதி கழிவு பொருட்கள் பெருங்குடலில் வந்து சேருகிறது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட கழிவு பொருள், மலக்குடலினை அடையும் போது நரம்பு துண்டலின் மூலமாக., நமக்கு மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இவ்வாறு தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெளியேற்றப்படுகிறது.
அபானன் வாயுவின் செயல்களினால், மலமானது வெளியேற்றப் படுகின்றன என்று சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றது.
மலம் கழிக்க முறை?
இந்திய கழிவறை(squatting toilet posture) முறையே சிறந்தது. Anorectal angle (the angle formed by the junction of the rectum with the anus) இந்திய கழிவறை முறையில் நேரடியாக(900) இருப்பதால், மலம் வெளியேற்றப்படுவது எளிதாகிறது. இந்த மதிப்பு மேற்கத்திய(sitting toilet posture) முறையில் மாற்றம் ஏற்படுவதால், சில தடைகளை ஏற்படுத்துகிறது.
மலம் நீர் கழிக்கையில், முதலில் சிறுநீரும் ,பின்னர் மலமும் கழிக்க வேண்டும். இந்த முறை மாறுமானால், நோய் வர வாய்ப்புள்ளது என்று எடுத்து கொள்ளலாம்.
மலம் கழிக்கையில், வலது கையினால், இடப்பக்கத்து அடிவயிற்றை பிடித்திருக்கும் போது எளிதாக மலத்தை வெளியேற்ற முடியும்.
மலக்கட்டு என்றால் என்ன?
முறையான வரைமுறை இல்லை. இருந்தாலும், வாரத்திற்கு மூன்றோ அல்லது அதற்கு குறைவான தடவை மலம் கழிப்பதும், மலத்தை முறையாக வெளியேற்றாத தன்மை, முயற்சி செய்து மலத்தை வெளியேற்றதல் போன்ற தன்மைகளை மலக்கட்டு என்று கூறலாம்.
எவ்வளவு பேர் உள்ளனர்?
உலக அளவில் சுமார் 12 சதவீத மக்கள் மலக்கட்டு பிரச்சனையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 5 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆண்களை விட பெண்கள் அதிகமாக பிரச்சனைக்கு உள்ளாகின்றனர். மலக்கட்டு பிரச்சனை, முதியோர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.
எவ்வாறு உண்டாகிறது?
நார் சத்து மிக்க உணவு பொருட்களை குறைத்து எடுத்தல், குறைந்தளவு நீர் அருந்துதல், உடல் உழைப்பு இன்மை, மன அழுத்தம் மற்றும் பிரசவ காலங்களில் ஏற்படலாம்.
மூலம், ஆசன வாய் வெடிப்பு, தைராய்டு சுரப்பு குறைந்த நிலை, தசை வாதம், சர்க்கரை வியாதி, நடுக்கு வாதம் மற்றும் மன அழுத்தத்திற்கான மருந்துகளினாலும் ஏற்படலாம்.
மேற்கண்ட காரணங்களினால், பெருங்குடலின் இயக்க தன்மை குறைந்தும், நீர் சத்து அதிகமாக உட்கிரக்கப் படுவதாலும் மல பந்தம் ஏற்படுகிறது. கழிவறைக்கு செல்லும் எண்ணம் ஏற்பட்டு, அடக்க முயற்சிக்கும் போது, அதிக படியான நீர் உறிஞ்சப்பட்டு மலம் கடின தன்மை அடைகிறது. தற்போதைய சூழலில், இந்த நிலை தான் பெரும்பாலும் உண்டாகிறது.
எவ்வகையான பாதிப்புகளை உண்டாக்கும்?
”மலமதை யடக்கினலே
மலந்தனை வாயு தள்ளும்
சல தோட முழங்காலின் கீழ்
தன்மையாய் நோவுண்டாகும்
தலைவலி மிக வுண்டாகும்
சத்தமா மபான வாயு
பெலமது குறையும் வந்து
பெருத்திடும் வியாதி தானே…”
என்று வியாச பகவான் சரீர சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. தலைவலி, உடல் வலி, உடல் பலக்குறைவு, வயிற்று வலி போன்றவை ஏற்படும். மேலும் பசியின்மை, வயிறு உப்பிசம், வாந்தி போன்றவையும் ஏற்படலாம்.
மலக்கட்டு தொடர்ந்து கவனிக்கப்படாமல் இருந்தால், மூலம், மலக்குடல் வெளித்தள்ளப்படல், ஆசன வாயிலிருந்து இரத்தம் வருதல், ஆசன வாய் வெடிப்பு போன்ற நோய்கள் ஏற்படலாம்.
மலக்கட்டை தடுக்கும் முறைகள்:
கீரை வகைகள் மற்றும் நார் சத்துள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும்.
நீர் அதிகளவு(குறைந்த பட்சம் 2 லிட்டர்) எடுத்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக, காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் எடுத்து கொள்ளவும்
காரமான, எண்ணெய் உணவு பொருட்களை தவிர்க்கவும். காபி, டீ, மது மற்றும் புகையிலை பொருட்களை நீக்க வேண்டும்.
நடை பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சி முறைகளை மேற் கொள்ள வேண்டும்.
இரவு படுக்கைக்கு போகும் முன் திராட்சை, வாழைப்பழம், பால் போன்ற உணவு பொருட்களை எடுத்து கொள்ளலாம்.
மூலிகை மருந்துகள்:
ஆரம்ப நிலைகளில், மேற்கண்ட எளிய முறைகளை பயன்படுத்தலாம். மலக்கட்டை நீக்க முடியவில்லையெனில், மருந்துகளை எடுக்க ஆரம்பிக்கலாம்.
மலமிளக்கி மருந்துகளை செயல்படும் முறைகளின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்.
1. Stimulative laxative
2. Bulk forming laxative


Stimulative laxative:
இது குடலின் சுவரில் செயல்பட்டு, நரம்பு தூண்டலை ஏற்பத்தி மலத்தை வெளியேற்ற பயன்படுகிறது. இதனால், குடலின் வெளியேற்றும் தன்மையும், அலைவு தன்மையும் அதிகப்படுத்துகிறது. நீர் உட்கிரகிக்கப்படுவதை தவிர்த்து, கழிவு பொருட்களை நீர் தன்மையாக வெளியேற்றுகிறது. இது சுமார் 4-6 மணி நேரத்தில் செயல்பட கூடியது. இந்த வகை மூலிகைகளை தொடர்ந்து உபயோகப்படுத்தி வரும் போது சில பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். (எ.கா) திருநெல்வேலி சென்னா(நிலவாகை), ஆமணக்கு எண்ணெய்
நிலவாகையில் உள்ள senna glycoside பெருங்குடலில் 6-8 மணி நேரத்தில் செயல்பட்டு, மலத்தை வெளியேற்ற கூடியது. Anthroquinine glycoside கற்றாழையில் உள்ளது. இதுவும் 8-10 மணி நேரத்தில் பெருங்குடலில் செயல்பட்டு மலத்தை வெளியேற்றுகிறது.
ஆமணக்கு எண்ணெயில், ricinoleic acid(triglyceride) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது சிறுகுடலில் செயல்பட்டு, அலைவு இயக்கத்தை அதிகப்படுத்தி கழிவு பொருட்களை வெளியேற்ற கூடியது. இது 2-6 மணி நேரத்தில் வேலை செய்ய கூடியது.
Bulk forming laxative:
இது பெருங்குடலில் செயல்பட்டு, நீர் உட்கிரகிக்கும் தன்மையை மாற்றி, பெருங்குடலில் அதிகளவு நீரை அதிகப்படுத்தி, கழிவு பொருட்களின் அளவினை அதிகப்படுத்துகிறது. இது மெதுவாக செயல்பட கூடியது(2-3 நாட்கள்). மலமிளக்கியாக நீண்ட காலம் பயன்படுத்தலாம். மேற்கண்ட முதல் வகை மலமிளக்கியை விட சிறந்தது. (எ.கா) இசப்புகோல் விதை. நார்ச்சத்துள்ள உணவு பொருட்கள் பெரும்பாலும் இந்த வகையை சேர்ந்தது.
இசப்பு கோலை நீருடன் கலந்து எடுத்து கொள்ள வேண்டும். அதிலுள்ள mucilage என்ற பொருள், நீரினை உறிஞ்சி கழிவு பொருட்களின் கடின தன்மையை குறைத்து, எளிதாக வெளியேற்றுகிறது.
இதை தவிர, திரிபலா சூரணம், கடுக்காய் இலேகியம், வெந்தையம், திராட்சை, கடுகுரோகிணி மற்றும் வில்வம் போன்ற மருந்துகளையும் எடுத்து கொள்ளலாம்.
வஜ்ர ஆசனம், பவள முத்தாசனம், தனுராசனம், யோக முத்ரா, சலபாசனம் மற்றும் புஜங்காசனம் போன்ற ஆசன நிலைகளையும், பஸ்தீரிகா மற்றும் கபால பாத்தி போன்ற பிராணாயம பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக