உடலில் உயிர் தரித்திருப்பதற்கு மூலாதாரமாக இருப்பதே நம் ரத்தத்தில் உள்ள பிராணவாயு...
அந்த பிராணவாயுவினை உடல் முழுக்க ரத்தத்தின் மூலமாக கடத்திசென்று சேர்ப்பதும், கேடடைந்த பிராணவாயு குறைந்த ரத்தத்தினை உடலின் பிறபகுதிகளிலிருந்து நுரையீரலுக்கு கடத்தி சென்று சுத்திகரிக்கும் மிகப்பெரிய அற்புதமான பணிகளை செய்வது நம் இதயமே 





இதயம் செயலற்று போனால் எல்லாமே செயலற்று போகும்....
இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ தேடல்களோடும், கனவுகளோடும், லட்சியங்களோடும் பயனப்பட்டுக்கொண்டே இருக்கும் சூழலில் உடலின் மீதும் , உண்மையான ஆரோக்கிய நல்வாழ்வின் மீதும் அக்கறை கொள்வதில் அசட்டை செய்ய பழகிவிட்டோம்...
உண்ணும் உணவுகளில் கவனமின்மை, உணவு உண்ணும் நேரம் தப்பிபோதல், அளவுக்கு மீறிய உடலுக்கு ஆகாத உணவுகளை உண்ணுதல் ,
நேரம் கெட்ட நேரத்தில் உறங்குதல் ,
உடல் உழைப்பின்றி சோம்பி கிடத்தல் ,
உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சியில் நம்பிக்கை இல்லாமல் இருத்தல் , தேவையில்லாமல் கோபம் கொள்ளுதல், புண்ணியமே இல்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுதல், பிறரிடம் வெளிப்படுத்தமுடியாத பல்வேறு பிரச்சனைகளை தன் உள்ளத்திலே புதைத்து வைத்தல்,
தேவையில்லாத மனப்பதட்டங்கள்
என்பன போன்ற பல்வேறு காரணங்களினால் நமக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்..... 







முன்பெல்லாம் 50வயதை கடந்த நபர்களிடமே காணப்பட்ட பல்வேறு இருதயம் சார்ந்த பிரச்சனைகள் இன்றைய காலகட்டத்தில் 20வயதினை கூட எட்டிப்பார்க்காத இளையவர்களிடமே அதிகமாக காணமுடிகிறது.....
இதற்கெல்லாம் மூலக்காரணமாக இருப்பதே நம்முடைய மாறுபட்ட வாழ்வியல் முறைகளும், மாறிப்போன நம் பாரம்பரியமான உணவுமுறை கலாச்சாரங்களுமே என்பதை யாராலும் மறுக்கமுடியாது..... 





நாம் நலமோடு ஆரோக்கியமாக உள்ளோமா என்பதை தீர்மானம் செய்வதே நம் உடலின் எடை தான்... நம் உயரத்திற்கு ஏற்ற உடலெடையோடு உள்ளோமா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.. காரணம் உடல்பருமனே உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு குறிப்பாக இதயம் சார்ந்த நோய்களுக்கு அச்சாரமாக விளங்கும்..... 











வருடத்திற்கு ஒரு முறையேனும் நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவினை பரிசோதனை செய்துகொண்டாலே பல்வேறு இதயநோய்களில் இருந்து தப்பித்துகொள்ளலாம்..... மூன்று மாதங்களுக்கு ஒரு முறையேனும் ரத்த அழுத்தத்தினை பார்ப்பது கூடுதல் நன்மை பயக்கும்.... 







அதிகம் புளிப்பான உணவுகள், கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை இவற்றை குறைத்துக்கொண்டாலே போதும்....
முடிந்தளவு சரிவிகித உணவுகளை வீட்டிலேயே சமைத்து உண்பது நல்லது... மைதா சார்ந்த உணவுகள், பேக்கரி உணவுகள், பெர்கர், பிட்சா, போன்ற நம் உடலுக்கு ஒவ்வாத மேலை நாட்டு உணவுகள், துரித உணவுகள், பிரியாணி, பதப்படுத்தபட்ட உணவுகள், கொழுப்பு சத்து சார்ந்த உணவுகளான மாட்டு இறைச்சி, ஆட்டுக்கறி, பிராய்லர் கோழி, இவற்றினை குறைத்துகொள்வதே நலம் பயக்கும்...... புகை பழக்கமும், மதுபழக்கமும் இன்னும் இதயத்தினை பாதிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பதே சாலசிறந்தது...
அறுசுவை உணவுகளை சரியான நேரங்களில் சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ளவேண்டும்.... இவற்றோடு நாம் குடிக்கும் நீரின் அளவினையும் கூட்டிக்கொள்ள வேண்டும்.... குறைந்தது ஒரு நாளைக்கு 2லிட்டர் தண்ணீர் பருகவேண்டும்.... கரும்புச்சாறு, பழச்சாறு, மோர் போன்ற நீர்த்துவமான பானங்களும் நன்மை பயக்கும்.... 







அதிகமான காய்கறிகள் குறிப்பாக நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த பீன்ஸ், அவரை, வெண்டை, சுண்டை, முருங்கை, கத்திரி, பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், வாழைத்தண்டு,முள்ளங்கி, கேரட், பீட்ரூட், காலிபிளார், முட்டைகோஸ், குடைமிளகாய், நூக்கல் இவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்...
வாரம் இரண்டு மூன்று நாட்களுக்கு கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்....
கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, இஞ்சி சேர்ந்த துவையல்களை எடுத்துக்கொள்ளவும்...
ரத்தத்தினை கெட்டியாகாமல் தடுக்கும் ஆற்றலை கொண்ட சின்னவெங்காயம், வெள்ளை வெங்காயம், வெள்ளைபூண்டு இவற்றை அடிக்கடி கூறிக்கொள்ள மாரடைப்பு வராமல் தடுக்கும்....
அன்றாடம் உணவில் மிளகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், சோம்பு, இலவங்கப்பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய் போன்றவற்றை கூறிக்கொள்ள கூடுதல் நலம் பயக்கும்.... 



உறக்ககோளாறுகளே உடலில் பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு முக்கிய காரணமாக அமைவதால், முடிந்தளவு 6-8மணி நேரம் உறங்குவதை உறுதிசெய்துகொள்ளவேண்டும்..... 







தேவையற்ற பதற்றங்கள், குழப்பமான சூழல்கள், அதீதமான மனக்குழப்பங்கள், போன்ற பல்வேறு மனம் சார்ந்த பிரச்சனைகள் இன்னும் இதயத்திற்கு ஊறுவிளைவிக்கும்..... முடிந்தளவு மனதினை சாந்தபடுத்த யோகாசன பயிற்சிகள், மூச்சு பயிற்சிகள், சூரியநமஸ்காரம், இவற்றை செய்துவர நிச்சயம் நலம் உண்டாகும்..... 







மேலும் அன்றாடம் நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஓட்டபயிற்சி, நீச்சல் பயிற்சி அல்லது எதாவது ஒரு விளையாட்டுகளில் நம்மை ஈடுபடுத்திகொள்ள இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும் என்பதில் ஐயமில்லை............ 









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக